ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் பெயர்களை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின், பிம்பர் கலி என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் பகுதியை நோக்கி நேற்று ராணுவ வாகனம் சென்றது. வன பகுதியில் செல்லும் போது மழை பெய்தது. மழையினால் சாலையில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை இருந்தது. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து வாகனம் தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் அடையாளங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது. உயிரிழந்த வீரர்கள் ஹவில்தார் மன்தீப் சிங், லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால், லேன்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹர்கிருஷ்ணன் சிங், சிப்பாய் சேவாக் சிங் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால் ஓடிசை மாநிலத்தைச் சேர்ந்தவர். மற்ற 4 பேரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் 5 பேரும் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படைப் பிரிவின் 16வது கார்ப்பைச் சேர்ந்தவர்களாவர். நக்ரோடாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இவர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தில் 16வது கார்ப்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான ஒயிட்நைட் கார்ப்ஸில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தோளாடு தோளாடு நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =