கொரோனா பெருந்தொற்று பரவல் எதிரொலியாக நடப்பு மாதம் முழுவதுமாக பண்டிகைகளுக்காக மக்கள் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் செப்டம்பர் மாதம் முழுவதும் பண்டிகைகளுக்காக மக்கள் பெருமளவு கூடுவதை அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக பல்லா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பண்டிகைகளுக்காக பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவது கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே பண்டிகைகளின் போது மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளை உள்துறை செயலாளர் அஜய் பல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.கூட்ட நெரிசல் நிறைந்த அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பரிசோதனை, தொற்றை கண்டறிதல், சிகிச்சை கண்காணிப்பு, தடுப்பூசி ஆகிய 5 வழி செயல்முறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.