சென்னை மாநகரின் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த இறுதி அறிக்கை இன்று முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான கமிட்டி சென்னை தலைமை செயலகத்தில் தாக்கல் செய்தது. 90 பக்கங்களை கொண்ட இடைக்கால அறிக்கை கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகளை அளித்த திருப்புகழ் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இது குறித்து முதல்வர் பேசுகையில், சென்னை மாநகரின் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி பரிந்துரைகளை வழங்க திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயலாளர்கள் அனைவரும் தொடர்ந்து மேற்பார்வை செய்து பணிகளை 80 சதவிகிதம் முடிக்க காரணமாக இருந்தனர். அரசுக்கு கடந்த முறை என்பது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயரை பெற்றோம்.
அந்த நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் கமிட்டியின் செயல்பாடு ஆகும். இதற்கு நேர்மையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் வெள்ள பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உழைத்திட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ், குழுவின் உறுப்பினர்கள் ஜானகிராமன், பிரதீப்மோசஸ், திருமலைவாசன், பாலாஜி நரசிம்மன், அறிவொளி நம்பி, இளங்கோ, அன்பு மொழிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.