கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கோவிந்தன் என்கிற விவசாயி நந்தி தேவா என்ற எருதை வளர்த்து வந்தார்.
இந்த எருது கடந்த பல வருடங்களாக பல்வேறு மாவட்டங்களில் நடைப்பெறும் எருது விடும் திருவிழாக்களில் பல முறை முதல் பரிசை தட்டிச்சென்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், செட்டிமாரம்பட்டி கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென “நந்தி தேவா” எருது அசைபோட முடியாமல் அவதிப்பட்டுள்ளது. இதனையெட்டி கால்நடை மருத்துவர் வேடியப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவர் வேடியப்பன் நந்திதேவா எருதை பரிசோதித்து பார்த்த போது எருது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது.
இதுகுறித்து வேலூர், சேலம், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எருது வளர்போருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் செட்டிமாரம்பட்டி கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் நந்திதேவா எருதுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நந்தி தேவா எருது வேலூர் மாவட்டம் மேல்மயில் என்னுமிடத்தில் 2020ல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதல் பரிசை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடதக்கது.