செங்குன்றம் அருகே கத்திமுனையில் மிரட்டி காதல் ஜோடியிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற மர்மநபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
செங்குன்றத்தை அடுத்த சோழவரம் குதிரை பள்ளத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (24). இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதியன்று இரவு இவர், தனது 20 வயதான காதலியுடன் செங்குன்றத்தை அடுத்த எல்லையம்மன் பேட்டை சர்வீஸ் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், காதல் ஜோடியிடம் கத்திமுனையில் மிரட்டி இருவரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.