சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான புதிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000த்தில் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும். ரூ.2,097 கோடி மதிப்பில் ஊரக சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும். 12,125 நூலங்கங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும். ரூ.233 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கிராம ஊராட்சி கட்டங்கள் கட்டி முடிக்கப்படும்.

பெண் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகரித்து வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க உள்ளூர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 5,000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்படும்.

ஊரக மற்றும் நகரப் பகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்ட உடன் மாவட்ட திட்டக்குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.