மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்த தமிழிசை மூவர்களான மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர் ஆகிய மூவரும் உலகளவில் முதன் முதலில் இசையை வளர்த்தவர்கள். இவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் மணிமண்டபம் கட்டப்பட்டது.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை பராமரிக்காமல் பழுதடைந்து விட்டது. தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அதை பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் கட்டிடம் முழுவதும் பழுதடைந்து காணப்படுகிறது.
தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழையும், தமிழுக்காக போராடியர்களுக்கும் மணிமண்டபம் மற்றும் சிலைகள் அமைத்தும், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். உலக அளவில் தமிழிசையை வளர்த்த மூவர்களின் மணி மண்டபம் பழுதடைந்து கிடப்பதால் அதனை பராமரிப்பு செய்து புதுப்பிக்க ரூபாய் 47 லட்சம் நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து பணி தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் வந்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பணி குறித்து எடுத்துரைத்தார்.
அப்பொழுது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.