
கோவை கே.கே.புதுாரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 24. கடந்த, 2018 ம் ஆண்டு, 17 வயது சிறுமியை காதலித்தார். அப்போது, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தனர். அதில் சிறுமியை பாலசுப்ரமணியம் ஏமாற்றியது தெரிந்தது. இதுகுறித்து பெற்றோர் கோவை மத்திய மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார் பாலசுப்ரமணியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி(பொறுப்பு) ரவி, பாலசுப்ரமணியத்துக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.