சினிமா பாடலாசிரியரும், தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 86.
சினிமா பாடலாசிரான கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னை, அடையாறில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக உறுப்புகள் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டா் சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இன்று (செப்.,8) காலை 9.33 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில், 1935 அக்., 6ம் தேதி பிறந்தவர் புலமைப்பித்தன்; இயற்பெயர், ராமசாமி. நூற்பாலையில் பணிபுரிந்தபடியே, தமிழ் புலவர் படிப்பை நிறைவு செய்தார். 1964ல், படங்களுக்கு பாடல் எழுதுவதற்காக, சென்னை வந்தார். சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, ‘நான் யார்…’ என்ற பாடல் வழியாக, திரையுலகில் நுழைந்தார். அடிமைப் பெண் படத்தில் எழுதிய, ‘ஆயிரம் நிலவே வா…’ பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நண்பரானார். தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராக பணியாற்றினார். அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார்.