சத்தீஸ்கர் மாநிலம், மஹசாமுண்ட் மாவட்டம், காந்த்புல்ஹர் கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் நேற்று இரவு செங்கலை சுட தொழிலாளர்கள் தீ வைத்துள்ளனர். பின்னர், தொழிலாளர்கள் 6 பேர் செங்கல் சூளையில் தீ வைக்கப்பட்ட சுடு செங்கல் மேடை மீது படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை பிற தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு சக ஊழியர்கள் 6 பேர் படுத்து கிடப்பதை பார்த்து அவர்களை எழுப்பியுள்ளனர்.
அப்போது, 5 பேர் உயிரிழந்த நிலையிலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக அந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், உயிரிழந்த 5 பேரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் செங்கள் சூழையில் செங்கல் சூடுபடுத்த தீ வைத்துவிட்டு அதன் மேல் அடுக்கில் படுத்து உறங்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.