
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சசிகலாவை அதிமுகவிற்கு தலைமை ஏற்க கோரி அதிமுக மாவட்ட இணைச்செயலாளர் வேங்கையன் ஏற்பாட்டில், சின்னம்மா பேரவையின் மாநிலத் தலைவர் கே.பரந்தாமன், மாநிலச் செயலாளர் எம்.அருள் ஆகியோரின் தலைமையில், உளுந்தூர்பேட்டை சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் மனித சங்கிலி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
கடந்த சில மாதங்களாக சசிகலா அதிமுக நிர்வாகிகளிடம் செல்போன் வாயிலாக பேசி வரும் நிலையில், உளுந்தூர்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலாவை அதிமுக பொதுசெயலாளராக பொறுப்பேற்று ஒன்றரை கோடி தொண்டர்களை வழி நடத்த வரவேண்டும் என்ற பேனருடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகரத்தின் சார்பாக பரமசிவன், வெங்கடேசன், ஏழுமலை மற்றும் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.