
சசிகலாவிற்கு சொந்தமான, செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், வருமான வரித்துறை முடக்கி, ‘சீல்’ வைத்துள்ளது. ‘நான் பினாமி இல்லை’ என்பதை நிரூபிக்கவும் சசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில், 2017ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, 2019ல் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. 2020ல் ஐதராபாதில் உள்ள, ‘ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்’ நிறுவன பெயரில் இருந்த 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.அதில், சென்னை போயஸ் தோட்டத்தின் வேதா நிலையம் எதிரே, 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடமும் அடங்கும்.
ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200 ஏக்கர் நிலங்கள் உட்பட 300 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் கையகப்
படுத்தப்பட்டன.இந்த சொத்துக்களின் பரிமாற்றம், 2003 – 2005ல் நடந்துள்ளது. சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக, சசிகலாவிற்கு ஏற்கனவே, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா உட்பட அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், அவரது சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், முடக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் பையனுார் பகுதியில் 49 ஏக்கரில் அமைந்துள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா முடக்கப்பட்டுள்ளது.
பங்களா முடக்கப்பட்டதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில், 10 பக்கங்கள் உடைய நோட்டீஸ், அதன் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள், இந்த சொத்தின் வாயிலாக ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது. இது குறித்து சசிகலா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் மற்றும் திருப்போரூர் சார் – பதிவாளர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட சொத்து வாங்கிய விபரங்களை தெரிவித்து, ‘நான் பினாமி இல்லை’ என, சசிகலா நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது.கடந்த 2019 முதல் தற்போது வரை, சசிகலாவுக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.