தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை வரும் 5ம் தேதியும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வரும் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்த அமைச்சர் திட்டமிட்டபடி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பின்னணியில் தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பள்ளிகள் திறப்பு தேதி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்த அவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி திறப்பு தேதி குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறிப்பட்டுள்ளார்.