
கொரோனா இலவச தடுப்பூசிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் உள்ள சிம்லாவில் ஜன ஆசீர்வாத் யாத்திரையை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கினார். இந்த யாத்திரையை அவர் 5 நாட்கள் மேற்கொள்ளும் சூழலில் 623 கிமீ தொலைவை கடந்து செல்கிறார்.
இந்நிலையில் நேற்று யாத்திரையின் தொடக்கத்தையொட்டி அவர் கூறுகையில், மத்திய அரசு, கொரோனா 3வது அலையை சமாளிப்பதற்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. இதற்காக ரூ.23,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அலையானது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என்று வல்லுனர்கள் அஞ்சுவதால், குழந்தைகள் பராமரிப்பை பலப்படுத்துவதற்கு சிறப்பான முக்கியத்துவம் தரப்படுகிறது. கொரோனா இலவச தடுப்பூசிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது. கொரோனா 2வது அலை தாக்கியபோது, ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் என யாரும் அறிந்திருக்கவில்லை. இப்போது ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன.
இமாசல பிரதேசத்தில் சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.4,200 கோடி செலவிடப்படும். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் கலையும், கலாச்சாரமும் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஊக்குவிக்கப்படும் எனக்கூறினார்.