கேரளாவில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

 கொரோனா இரண்டாம் அலை காரணமாக கேரளாவில் மே 8-ம் தேதி அன்று  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய சுற்றுலா தளங்கள்  அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. சமீப நாட்களாக நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக கேரளா உள்ளது. இச்சூழலில், கேரளாவில் சுற்றுலாத் தலங்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்கு வணிக வளாகங்களும் திறக்கப்படுகிறது.

 ஊரடங்கில் புதிய தளர்வுகளை கேரள அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை வரும் 11-ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவை இயங்கலாம். கடைகளுக்கு அளிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகள் மால்களுக்கும் பொருந்தும். ஏசி இல்லாத ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

 கொரோனா காரணமாக சுற்றுலா துறையில் மட்டும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல தடையில்லை. அதே சமயம், நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு அனுமதியில்லை. அருவிகளை கண்டு ரசிக்க மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது.

 சுற்றுலா வருபவர்கள், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து இரு வாரங்கள் ஆகியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.