குறுவை சாகுபடி பாதிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான தண்ணீர் வரத்து இன்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பயிர்கள் கருக தொடங்கின. நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர்.

ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகின. இந்நிலையில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.