குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு!!!

குஜராத்தின் 17 வது முதலமைச்சராக பூபேந்திர படேல் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் குஜராத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

 பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், செப்டம்பர் 11 ம் தேதியன்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சியில் பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் செயல்படும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் நேற்று மதியம் 3 மணி அளவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நரேந்திர சிங் தோமர் கூறினார். இதனையடுத்து குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். காந்திநகரில் முதலமைச்சருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2017 பேரவைத் தேர்தல் கட்லோடியா தொகுதியில் 1.17 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பூபேந்திர படேல் வெற்றி பெற்றார். பூபேந்திர படேல் அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், மாநகராட்சி ஆணையர் நிலைக்குழு தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.