காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் சுஷ்மிதா தேவ் மம்தா கட்சியில் ஐக்கியம்?

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்.பி.,யுமான சுஷ்மிதா தேவ் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவரும் (மகிளா காங்கிரஸ் தலைவர்) முன்னாள் எம்.பி.,யுமான சுஷ்மிதா தேவ், தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்., தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், ‛பொது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறேன். ஆதலால், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். காங்கிரஸ் கட்சியுடன் 30 ஆண்டுகால உறவு மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் ஆசீர்வாதத்துடன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கப்போகிறேன்,’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் விலகினேன்? என்பதற்கான எந்தக் காரணத்தையும் சுஷ்மிதா தேவ் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சுஷ்மிதா தேவ், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியை சுஷ்மிதா தேவ் சந்தித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியிலிருந்து சுஷ்மிதா தேவ் விலகியது தொடர்பாக காங்., மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவு: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சுஷ்மிதா தேவ் விலகியுள்ளார். இளம் தலைவர்கள் விலகும்போது, கட்சியை வலிமைப்படுத்த எடுக்கும் முயற்சிக்கு வயதான நாங்கள் குற்றம் சாட்டப்படுகிறோம். கட்சியும் கண்களை மூடிக்கொண்டு செல்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.