கவிராசன் அறக்கட்டளை சார்பில், ஆசிரியர் தின விழா, புதுக்கோட்டையில் நடந்தது

விழாவிற்கு, கைக்குறிச்சி ஶ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர், குரு. தனசேகரன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில், புதுக்கோட்டை கலைமகள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர் இரா. கௌசல்யா, புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் த.சகாயராஜ், குழிபிறை மு.சி.த. இராம.மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் வீர.ராமசாமி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சு.குகன்,  வடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் மா.ரெஜி, ஆகிய ஐவருக்கும், நட்சத்திர ஆசிரியர் விருதுகளை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.

அவரின் உரையில்;”என்னுடைய உயர்வுக்கு காரணம் என் ஆசிரியர்கள்தான். அதிலும், என்னை வகுப்பின் தலைவனாக்கிய பாலையா பள்ளி ஆசிரியை விஜயலெட்சுமி அவர்கள், இன்று நான், நாடாளுமன்ற உறுப்பினராக உயர, முக்கியமான காரணம். அவர்தான், என்னை முதலில் மேடை ஏற்றிப் பேச வைத்தார். மாணவர்கள் வாழ்வில் உயர்வது கூட, ஆசிரியர்களுக்கு செய்யும் நன்றிதான். மாணவிகளாகிய நீங்களும் வாழ்வில் உயர்ந்து காட்டுங்கள். அப்போதும், ஒரே மாதிரி இருப்பதை விட, ஒற்றுமையாக இருங்கள். நாட்டுக்கும் அதுவே தேவை!” என்று குறிப்பிட்டார். தேசிய நல்லாசிரியர் விருதாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, தனியார் தொலைக்காட்சியின் பேச்சு நிகழ்வின் வெற்றியாளர் கவிஞர் . மு.இராகவேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஶ்ரீ பாரதி கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, லியோ ஃபெலிக்ஸ் லூயிஸ், கனகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் தொடக்கத்தில், கவிராசன் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் கவி. முருகபாரதி வரவேற்புரை ஆற்றினார். நிறைவில், ஶ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் செ.கவிதா நன்றியுரை ஆற்றினார்.