தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா தலைமைச் செயலர் சாந்திகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், தெலுங்கானா முனிசிபல் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதியில் இருந்து கவர்னரிடம் நிலுவையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் சுயமாக செயல்படக்கூடாது என்பதை ஷம்சீர் சிங் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது என்றும், மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் போது, அதற்கு கவர்னர் மறுப்பு கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, ஆளுநரின் சட்ட விரோதமான செயல்பாட்டை, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவித்து, நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.