புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிற்கிணங்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதல் படி, கறம்பக்குடி வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
கணக்கெடுப்பு பணியினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கறம்பக்குடி நரிக்குறவர் காலனி குடியிருப்புப் பகுதியில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட இரண்டு இடைநின்ற பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
பின்னர் அம்மாணவிகள் பிலாவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பில் நேரடிச் சேர்க்கையாக மாவட்ட உதவி திட்டஅலுவலர் முன்னிலையில் சேர்க்கப்பட்டனர். அம்மாணவிகளுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் அரசின் இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கினார்.
ஆய்வின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், கறம்பக்குடி வட்டார மேற்பார்வையாளர் அர்ஜுனன், ஆசிரியர் பயிற்றுநர் பெரியசாமி, தலைமையாசிரியை உமாமகேஸ்வரி, ஆசிரியர் கமலக்கண்ணன் மற்றும் தன்னார்வ ஆசிரியை விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.