புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி பல்லவராயன் பத்தை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நகரத்தார் உதவும் கரங்கள் மற்றும் புதுகை ஸ்டார் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் முனியன் ஜான்சிராணி, சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் பாலாஜி, கந்தவல்லி மருத்துவமனை கண் மருத்துவர் இளவரசி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவா் சிலம்பரசன், புதுகை ஸ்டார் மருத்துவமனை பொதுநல மருத்துவர் மேனகா, புதுப்பட்டி பல்லவராயன்பத்தை ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமையா ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.
இம்முகாமில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, உடல் எடை, கண் பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, இலவச பரிசோதனைகள் நடைபெற்றது, மேலும் குழந்தை வளர்ப்பு, இணை உணவு, இரத்த சோகை உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. சிறுநீரக கற்களால் ஏற்படும் பிரச்சனை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, வயிற்று வலி, வாந்தி, நீர் கடுப்பு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றிற்கு இம்முகாமில் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன, இம்முகாமில் கறம்பக்குடி புதுப்பட்டி பல்லவராயன்பத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.