புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி திருமணஞ்சேரி விலக்கு சாலையில் உள்ள அரசு சார்நிலை கருவூல அலுவலகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவர் ஊதா நிற கைலியும், ஆரஞ்சு நிற சட்டையும் அணிந்திருந்தார். அவரது உடலுக்கு அருகே பிராந்தி பாட்டில், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டில், குளிர்பானம் போன்றவை இருந்தது. உடனே அவரது உடலை மீட்ட போலீசார
பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி கிராம நிர்வாக அதிகாரி அண்ணாதுரை கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இறந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.