கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் வழிகாட்டுதலின் படியும், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆலோசனையின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான் பட்டி, மோகனூர் குடியிருப்பில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு மற்றும் ரகமதுல்லா ஆகியோர் பார்வையிட்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கினர்.
மேலும் வரும் 29 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் 5 வது புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வு பதாகை மற்றும் அழைப்பிதழை தன்னார்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கினர்.
பார்வையின் போது, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தன்னார்வலர்களை பாராட்டியதுடன், தன்னார்வலர் – பெற்றோர் வாட்ஸ்அப் குழு உருவாக்கம், ஊக்கத்தொகை பெறப்பட்ட விபரம், மையங்களில் விழாக்கள் கொண்டாடப்பட்ட விவரம் மற்றும் பள்ளிகளில் உள்ள கற்பித்தல் வளங்களை பயன்படுத்துதல் போன்ற விவரங்களைக் கேட்டறிந்தனர்.
புத்தக திருவிழாவில் பல்வேறு வகையான நூல்களை வாங்கி படிக்க வேண்டும் எனவும், புத்தகங்களை வாசிப்பதன் விளைவாக தான் பல்வேறு அறிஞர் பெருமக்கள் உருவாக்கினர்.அதுபோல மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.