எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) மற்றும் ஓஎன்ஜிசி அகில இந்திய எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச் சங்கம் இணைந்து, 2022-23-ம் ஆண்டுக்கான எஸ்சி, எஸ்டி நலத் திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, எழும்பூரில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 326 பயனாளிகளுக்குத் தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், சரக்கு ரிக்ஷா, காய்கறிகளை விற்பனை செய்வதற்கான தள்ளு வண்டி, இஸ்திரிப் பெட்டிகள், கரும்புச் சாறு பிழியும் இயந்திரம் என ரூ.29.9 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.
இவை தவிர மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.6 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், எழும்பூர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவப் படிப்பு பயில பயிற்சி மேற்கொண்டுள்ள மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் இயக்குநர்கள் ஆர்.கே.தாஸ்மானா, சி.பி.யாதவா மற்றும் ஓஎன்ஜிசி அகில இந்திய எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் பி.பிரபாகர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.