ரூபே, யுபிஐ ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றி வருகிறார். நேற்று முந்தினம் 10-வது அமர்வில் ‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதி சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தொழில் நுட்ப புரட்சியில் இந்தியா தற்போது உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது, சரக்கு மற்றும் சேவை வரி மூலம் பெரிய அளவில் வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா, நீதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி நகர்கிறது. இன்று உலக பொருளாதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா திகழ்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றது. ரூபே, யுபிஐ ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது. இது உலகில் நமது அடையாளமாக உள்ளது. டிஜிட்டல் நாணயத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. சுதந்திரத்தின் 75-வது ஆண்டில், இந்தியா யு.பி.ஐ. வழியாக ரூ.75 ஆயிரம் கோடியை பணபரிவர்த்தனை செய்துள்ளது. இது உலகில் இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கையான வலுவான நிதி அமைப்பு இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.