உச்சநீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்கும் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 24ஆக இருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பி.வி.நாகரத்னா, குஜராத் ஐகோர்ட் நீதிபதி பேலா திரிவேதி, கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி அபய் ஓகா, குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி விக்ரம்நாத், சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, கேரள ஐகோர்ட் நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் பி.வி.நரசிம்மா ஆகியோரது பெயர்களை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் பரிந்துரைத்து.
இந்த பட்டியலை ஏற்ற மத்திய சட்ட அமைச்சகம், இதற்கு ஒப்புதல் கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை முழுமையாக ஏற்று 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், புதியதாக நியமிக்கப்பட்ட 9 நீதிபதிகளுக்கும் ஜனாதிபதி மாளிகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பி.வி.நாகரத்தனா, பணி மூப்பு அடிப்படையில் வரும் 2027ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.
முன்ன்தாக உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்த நியமனத்தின் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளதால், இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.