தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளன, பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார், பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். இதனால்ஈரோடு இடைத்தேர்தல் பலமுனை போட்டி நிலவும் என தெரிகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார், அதனை தொடர்ந்து வைகோ, திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார்.