
உலக பிசியோதெரபி தின விழாவை முன்னிட்டு இலுப்பூர் கோட்டைமேட்டில் இயங்கி வரும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் பிசியோதெரபி தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜியோ ராஜாமணி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பிசியோதெரபி மருத்துவர் கோவிந்தசாமி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கேக் வழங்கி பேசுகையில்: உலக பிசியோதெரபி தின விழாவானது பிசியோதெரபியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் விழாவாகும். முக்கியமாக பக்கவாத நோயாளிகள் மூளை முடக்குவாத குழந்தைகள், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூட்டு வலி முதுகு வலியால் அவதிப்படுபவர்கள்,சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் தேவையான ஒரு இன்றியமையாத மருத்துவமாகும். தமிழ்நாட்டின் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தேவைப்படும் அவசியமான மருத்துவம் பிசியோதெரபி மருத்துவமாகும். முக்கியமாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் மாற்றுத்திறன் குழந்தைகளை பயிற்சியின் மூலம் நடக்க வைத்து அவர்களுக்கு கல்வி அளிப்பது மிகச் சிறந்த சேவையாக நாங்கள் கருதுகிறோம் என்று பேசினார். நிகழ்வில் சிறப்பு பயிற்றுநர் பாஸ்கர சேதுபதி, பள்ளி ஆசிரியர்கள் ஜெமி னிட்,வேலாம்பாள் மற்றும் ராஜாமணி மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.