இன்றும், நாளையும் தமிழகத்தில் கன மழை பெய்யும்’ என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

‘தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்’ என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி,கோவை, தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்.

அரியலுார், பெரம்பலுார், கடலுார், விழுப்புரம், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்யும்.சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

நாளை நிலவரம்நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று சோழவந்தானில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் இன்று மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.