இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் வருகிற டிசம்பர் 10ம் தேதி நடக்கிறது. இவற்றில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன் என இந்தியாவின் தங்க மங்கை என போற்றப்படும் கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா (வயது 58) கடந்த 26ம் தேதி தனது விருப்பத்தினை வெளியிட்டார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளேன் என குறிப்பிட்டார். தலைவர் பதவிக்கு அவரை தவிர, வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.. வேறு எந்த பதவிகளுக்கும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை என்று இதை தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். இதனால், போட்டியின்றி தலைவர் பதவிக்கு பி.டி. உஷா தேர்வாகும் நிலை உள்ளது.
இச்சூழலில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பி.டி.உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என மத்திய சட்ட மற்றும் நீதி துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனது டுவிட்டர் வழியே தெரிவித்ததுடன், தனது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார். கவுரவமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நமது நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களால் நாடு பெருமை அடைகிறது என்று தெரிவித்து உள்ளார்.
இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பி.டி. உஷா முதல் பெண் தலைவராவார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்களை அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.