இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து பதக்கம் பெற்ற இரண்டு வயது இரட்டை குழந்தைகள்

திருக்கோவிலுாரைச் சேர்ந்த, 2 வயது இரட்டை குழந்தைகள் தங்களது நுண்ணறிவுத் திறனால் இந்தியா புக் ஆஃப்  ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உள்ள சந்தைபேட்டையைச் சேர்ந்த நஜீர் அஹமத் (33) குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இர்பானா பேகம்(25), இவர்களின்  இரட்டை குழந்தைகளான இசான், இன்சியா ஆகிய இருவருக்கும் இரண்டு வயது நிரம்பி உள்ள நிலையில், இந்த இரட்டையர்கள் தங்களது  நுண்ணறிவு திறனால் அபார ஞாபசக்தியுடன் பொது அறிவு கேள்விகள் பலவற்றுக்கும் சரியாக பதில் அளிக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக  5 வித வண்ணங்களின் பெயர்கள்,  22 வகையான பறவைகளின் பெயர்கள், 25 வகையான மிருகங்களின் பெயர்கள், 19 வகையான வாகனங்களின் பெயர்களையும்  சரியாக கூறுகின்றனர்.

மேலும்  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள  உயிர் எழுத்துகள் குறித்தும், மனித உடல்களில் உள்ள பாகங்களின் பெயர்கள்  என பல்வேறு  கேள்விகளுக்கும்  சரியான பதில்களை  கூறி விடுகின்றனர்.

இந்த  இரட்டை குழந்தைகளின் அறிவாற்றலை அறிந்த  இந்தியா புக் ஆஃப்  ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் ஆய்வு செய்து, நுண்ணறிவில் சிறந்த குழந்தைகள் என்று இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2021ல் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் மற்றும் பக்கத்தையும் வழங்கியுள்ளனர்.