ஆலங்குடியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடந்த கோஷ்டி மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகையன் மகன் செல்லகணபதி (எ) விஜய். கடந்த சனிக்கிழமை இரவு கோஷ்டி மோதலால் கலிபுல்லா நகர் பிள்ளையார் கோவில் அருகில் அரிவாளால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத்தொடர்ந்து வெட்டிய கும்பல் தப்பிவிட்டனர்.
இச்சம்பவம் ஆலங்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை நேற்று இரவு ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்த பிறகு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தேடும் பணியை தீவிரப்படுத்த மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் காவல் ஆய்வாளர், அலாவுதீன் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி, சந்திரகாந்த், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாவட்ட எஸ்பி ஆய்வின்போது உடனிருந்தனர்.