
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இரண்டாவது குருஸ்தலமான நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிறுவர்களின் காவடி ஆட்டத்துடன் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
ஆலங்குடி சித்தி விநாயகர் கோவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலங்குடி முக்கிய வீதி வழியாக சிறுவர்களின் காவடி ஆட்டத்துடன் தொடங்கி பின்னர் ஆலங்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும், பொதுமக்கள் மற்றும் பெண்கள் முருக பக்தர்களுக்கு பாதங்களில் நீர் ஊற்றி பாதபூஜைகளில் ஈடுபட்டனர். பின்னர் ஆலங்குடி சிவன் கோவில் சென்றடைந்த முருக பக்தர்கள்.

முருகனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்கு அபிஷேகம் செய்து திரவியங்கள், மாவுப்பொடி அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம், பழ அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியனுக்கு தீபாதாரணை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.