ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை உக்ரைன் மற்றும் ஈரான் ராணுவ தளபதிகள் மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு சொந்த நாடு திரும்பி கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று விமானத்தை ஈரான் நாட்டிற்கு கடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும், இதில் தலிபான்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், ஆப்கானிஸ்தானில் புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை உக்ரைன் மற்றும் ஈரானின் விமானப்படை தளபதிகள் மறுத்துள்ளனர்.
மேலும் உக்ரைன் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று இரவு மஷாத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் உக்ரைனுக்கு சென்று, அங்குள்ள கிவ்வில் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஈரானின் விமானத் தளபதி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.