ஆந்திராவில் ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக மீன் பிடிக்கும் படகில் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பொடலகுரு அருகே தோடேரு கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றிப்பார்ப்பதற்காக 10 பேர் மீன்பிடி படகில் சென்றுள்ளனர். படகு புறப்பட்டு சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
தண்ணீரில் மூழ்கியவர்களில் மகேஷ், மகேந்திரன், யானை விஷ்ணுவர்தன், அட்ட கிரண் ஆகிய 4 பேர் மட்டும் பத்திரமாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர். ஆனால் சல்லா பிரசாந்த் (29), மண்ணூர் கல்யாண் (27), பட்டா ரகு (23), பதி சரேந்திரா (19), யாட்டம் பாலாஜி (21), அல்லி ஸ்ரீநாத் (17) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததனர். உயிரிழந்த 2 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படகில் அளவுக்கு அதிகமான நபர்கள் சென்றதால் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விப்பத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.