ஆக.13ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஆக.13ம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டி சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டு, தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-22ம் நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை 10 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யவுள்ளது. குறிப்பாக வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், இதனை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 14ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இதைத்தொடர்ந்து, துறை ரீதியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேச வேண்டியது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, மானியக் கோரிக்கைகள், புதிய திட்டங்கள் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.