அறந்தாங்கி நகராட்சியில் ரூ.30.52 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகளை தமிழக அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், ரூ.30.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை,சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்கள்.
இந்த குடிநீர் திட்டத்தில், 8.14 கி.மீட்டர் நீளத்திற்கு நீர் உந்தும் பிரதான குழாய்களும், 92.85 கி.மீட்டர் நீளத்திற்கு பகிர்மான குழாய்களும், 1,000 மீட்டருக்கு ஆழ்குழாய் கிணறு பிரதான குழாய்களும், 15,982 எண்ணிக்கையில் வீட்டு குடிநீர் இணைப்புகளும், 6,223 க.மீட்டர் சாலை மராமத்துப் பணிகளும், 300 மீட்டர் ஆழத்திற்கு 10 எண்ணிக்கையினை ஆழ்குழாய் கிணறுகளும், 2 இலட்சம் லிட்டர் கொள்ளளவுடைய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும்இ 9மீ X 6மீ அளவுடைய மின்விசை அறையும், மின்விசை பம்புகளும் உள்ளிட்ட பணிகள் ரூ.30.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்மூலம் அறந்தாங்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி அடையும். இந்த குடிநீர் திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களின பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் குடிநீரினை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இந்நிகழ்வில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகர்மன்ற துணைத் தலைவர் முத்து (எ) சுப்பிரமணியன், அறந்தாங்கி நகராட்சி ஆணையர் லீனா சைமன், பொறியாளர் தனலெட்சுமி, இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.