
அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வை குறைக்கூறி அப்பாவி மாணவர்களை பலி வாங்குகிறது திமுக அரசு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தனுஷ் (20). ஏற்கெனவே இரண்டு வருடங்களாக நீட் தேர்வை எழுதி வருகிறார். இதில் பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்பிபிஎஸ்தான் படிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார். இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவெடுத்துப் படித்து வந்துள்ளார்.
2 முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தனுஷ் இருந்துள்ளார். இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர் தனுஷ் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
”ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும், உச்ச நீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளைத் திமுக அரசு நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரைப் பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு என பதிவிட்டுள்ளார்.